தமிழ் நாடக இலக்கியம் தோற்றம்| Tamil Dramatic Origin & Literature.

தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

தமிழ்நாடகத்தின் தொன்மை:

 தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.    சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது. கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே என்ற குறள் வழி நாடக அரங்கம் இருந்த செய்தியினை அறியலாம். அகத்தியம், கூத்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற  நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனைச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் அவர்கள் குறிப்பிட்டுச் செல்கிறார். குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்து வகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.

இருவகை நாடகங்கள்:

வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை அக்காலத்தில் இருவகையாகப் பகுத்திருந்தனர். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக் காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக் காட்டப்படுவதாகும்.

பல்லவர் கால நாடகங்கள்:

சமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ் ஒளியிழந்தது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. எனினும் இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற நாடக நூல் புகழ் பெற்றிருந்தது. இன்னிசைக் கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.

சோழர் கால நாடகங்கள்;

சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச் சிறப்பைப் பாராட்டும்  “இராஜராஜவிஜயம்“  நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

tamil-dramatic-origin-tamilhisory.co.in


 தமிழ் நாடகத்தின் எழுச்சி:

17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளர ஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன் முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூக நாடகமாகும்.

தமிழ் நாடக முன்னோடிகள்:    

பம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.


• பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும். இவர் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார். இக்குழுவினரால் நடத்தப்படும் நாடகத்தில் கற்றவர்களையும் அறிஞர்களையும் நடிக்கச் செய்தார். நாடகக் கலைக்குத் தம் 81 ஆவது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண் பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார். பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட், ஆஸ் யூ லைக் இட் உள்ளிட்ட நாடகங்களை அமலாதித்யன், நீ விரும்பியபடியே என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார். சதி சுலோச்சனா, யயாதி, சந்திர ஹரி, தாசிப் பெண், சபாபதி போன்ற இவரது நாடகங்களில் சில திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன.

• பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.

சங்கரதாசு சுவாமிகள்-  முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர்.  ஆரம்ப காலத்தில் எமன், இராவணன் போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் நாடக ஆசிரியரானார். இவர் சமரச சன்மார்க்க சபை என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார். இக்குழு சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு நடத்தப்பெற்ற முதல் பாலர் நாடக சபையாகும். அதன் பிறகு தத்துவ மீனலோசனி வித்துவ பால சஎ என் நாடகக்குழுவினை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார். அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன்  உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.

நாடகங்களின் வகை:

தமிழ்நாடகங்களை அதன் கருப்பொருளைக் கொண்டு புராண நாடகம், இலக்கிய நாடகம்,  துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்படுத்தாலாம். சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின. பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும். இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.

தற்கால நாடகங்கள்:

 காலங்கள் மாற நாடக வளர்ச்சியும் மாற்றத்தினைக் கண்டது. விடுதலைப் போராட்டித்தில் எழுச்சியூட்டும் நாடகங்கள் தம் பங்கினைச் சிறப்பாகவே செய்தன.காந்தி குல்லாய், சர்க்கா, மூவர்ணம் போன்ற நாடகங்கள் அக்காலத்தில் விடுதலை உணர்வினைத் தூண்டின. தொழில்நுட்ப வளர்ச்சி திரையிலக்கியத்திற்குத் துணை புரிந்தனவே அன்றி நாடகத் துறை நலிவடைய காரணமாயின. என்றாலும் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்ர் நகைச்சுவை நாடகங்களை நடத்தி வருகின்றனர். மதுவந்தி அருண் அவர்கள் தியேட்டர் ஆஃப் மகம் என்ற அமைப்பின் மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாடகம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தகுந்ததாகும்.